Tuesday, October 22, 2013

இலக்கிய விழா - பட்டம் வழங்கல்






















 ஈரோடு தமிழ்ச்சங்கப் பேரவையும்,

துளி பல்சுவை திங்களிதழும் 

இணைந்து நடத்தும் இலக்கிய விழா, 

வரும்
 ஞாயிறு 27.10.13 அன்று 

ஈரோட்டில் உள்ள
 தமயந்தி பாப் சேட் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. 

அதில் எனக்கு ‘கந்தகக்கவி’ என்ற பட்டம் வழங்கப்பட உள்ளது.

 மேலும்
 நண்பர் நீலநிலா செண்பகராஜன் அவர்களுக்கு ‘செந்தமிழ்ச்சுடர்’ என்ற பட்டமும் வழங்கப்பட உள்ளது.


 அனைவரும் வருக.. வாழ்த்துகள் தருக...


ஹைக்கூ – 10 (தொகுதி – 2)


(பாண்டூவின் ‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ நூலில் இருந்து)



11.       கனவு சுமக்கும் விழி !
கணவாய்ப் போனது
பார்வையற்றோர்க்கு !!

12.      சிவன் கோவில் தெற்கு வாசல் !
இன்னும் மூடிக்கிடக்கிறது !
நந்தனை உள்வாங்கி !!

13.       சுதந்திரதின உரை
தொடங்கியது ...
பேசுவதை நிறுத்துங்கள் !

14.       சொல்லித்தர ஆளில்லை !
சொதப்புகிறது
முதற்காதல் !

15.   இணையமுடியவில்லை !
இறந்து போகிறோம் !
இப்படிக்கு நதிகள் !!

16.   ஓடுகிறது ...
அன்று ஆறு !
இன்று மணல் !!

17.      கையில் இனிப்பு
நெஞ்சில் ஊசி
சுதந்திரதினம்!?

18.   ‘காந்தி சுதந்திரம் வாங்கி தந்தார்’
கேலியாய்ப் புன்னகைக்கும்
பகத்சிங்கின் தூக்குக்கயிறு !

19.   ஆளுங்கட்சி எதிர்க்கட்சி சுயேட்சை
அனைவருக்கும் வாக்குக் கேட்டு
வலம்வரும் ‘காந்தி’!

20.  சிணுங்கும் போதெல்லாம்
பேசி அணைத்துக் கொள்கிறேன்
கைப்பேசியை !

Monday, October 21, 2013

ஹைக்கூ – 10 (தொகுதி – 1)


(பாண்டூவின் ‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ நூலில் இருந்து)




1.       காதலித்தேன் !
கை சேர்ந்தது
கவிதை !

2.      கவியரங்கம் !
நீ பெயர் சொன்னாய் !
கைதட்டியது கவிதை

3.      வரவேற்க ஆளில்லை !
வாசலோடு திரும்பும்
செருப்பு...

4.      குடத்தின் காலி இடங்கள் !
நிரப்புமா
பாமர மேகங்கள் ?

5.      உதிர்த்துச் செல்லும் காற்று !
கைகுலுக்கும் கிளை !
வாடும் உதிர்ந்த பூ

6.     கோழி கூவும் நேரம் !
கூவிக்கூவி எழுப்பியது
கைபேசி !

7.       குண்டு மழை !
எப்படி துளிர்க்கும்
போதி மரம் ?

8.       பலூன் காரனின் மூச்சு !
பிடித்து விளையாடும்
பிள்ளைகள் !

9.     அடுப்பங்கரையில் பூனை !
வாசலில் நாய் !
முதியோர் இல்லத்தில் தாத்தா !

10.    தாத்தா சொத்துப்
பேரனுக்காம்...
புன்னகைத்தது கைத்தடி !


Friday, October 18, 2013

புத்தகப் பாவை




கண்கள் காணும்வரை
கவிஞன் நானுமில்லை !
கண்ணில் பட்டுவிட்டாய்
கற்பனைக் கேதெல்லை !!

காகம் கரைந்தாலும்
கவிநூறு தோணுதடி !
காகித பாலையெல்லாம்
கவிச்சோலை ஆகுதடி !!

மீனெனும் விழிகளில்லை
தேனெனும் குரலுமில்லை...
ஊனெனக் கலந்து விட்டாய்
உன்னைவிட அழகியில்லை !


பாவை கடக்கும்வரை
பாதை எனக்குமில்லை
பூவைப் பார்த்தவண்டின்
பயணம் முடிவதில்லை !

சித்தத்தில் கலந்துவிட்டாய்
சிறுமனம் பறித்துவிட்டாய்
புத்தகப் புதுப்பெண்ணே
புத்தியில் நிறைத்தேனே !

காதல் பாவைகண்டால்
காளையர் பித்தராவார் !
பேதையும் அறிஞராவார் – நல்
புத்தகப் பாவையாலே !

பாண்டூ,
மிழ்நாடு லை லக்கியப் பெருமன்றம்,
6 ஜவுளிக்கடை வீதி, சிவகாசி – 626123.
செல் : 9843610020

Friday, October 11, 2013

படைப்பும் படைப்பாளியும் - பயிற்சிப் பட்டறை

 சிவகாசி,24-08-2013.

                சிவகாசியில் 24 ஆகஸ்ட் 2013 அன்று தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் மகளிர் கல்லூரி ‘படைப்பும் படைப்பாளியும்’ என்ற தலைப்பில் கவிதை மற்றும் சிறுகதைக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறையை தமிழ்துறைத் தலைவர் முனைவர் ப.கனகா அவர்கள் தலைமையில் நடத்தியது.



அதில் பயிற்றுநராக கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, முத்துபாரதி, கண்மனி ராசா, நீலநிலா செண்பகராசன் ஆகியோருடன்  நானும் கலந்துகொண்டு, பல கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பயிற்சி அளித்தோம்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தொகுத்த ‘படைப்பு அகமும் புறமும்’ என்ற நூல் வழங்கப்பட்டது.

பயிற்சி விவரம் :

படைப்பாக்கத்திறன் - கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி , சிவகாசி
படைப்புச் சிந்தனை - பாண்டூ, சிவகாசி
புது கவிதைகள் - கண்மணி ராசா , இராசபாளையம்
எனது கதைகள் - முத்துபாரதி, சிவகாசி
கவிதையின் புதிய வடிவங்கள் - நீலநிலா செண்பகராசன், விருதுநகர் 

படம் பார்த்து, அதற்கான கருத்தைப் பகிர்தலும் மேலும் அந்த கருத்தை மையப்படுத்தி கவிதை மற்றும் சிறுகதை எழுதி மாணவ மாணவியர் பயிற்சி பெற்றனர். அவற்றில் சிறந்த படைப்பிற்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, அக்கல்லூரியின் முன்னாள் மாணவியும் கவிஞருமான திருமதி.பத்மாவதி தாயுமானவன், மதுரையிலிருந்து கலந்துகொண்டார்.

பயிற்சிக்குப் பின் மாணவர்கள், பயிற்சி குறித்த தத்தமது கருத்துகளைப் பகிர்ந்தனர்.  இப்பயிற்சி
  1. எங்களையும் படைப்பை எழுதவைத்து படைப்பாளராய்உணரவைத்தது.
  2. வெறும் கேட்பவராக மட்டுமல்லாது கலந்துரையாடல் மூலம் எங்களையும் பங்கு பெற வைத்தது.
  3. அவ்வப்போது வழங்கப்பட்ட ஊக்கப்பரிசுகள் நிகழ்வை சுவாரஸ்யமாக்கின.
  4. பகிரப்பட்ட கருத்துகளை எப்போதும் மறந்திடா வண்ணம் புத்தகமாக கலந்துகொண்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கியது முத்தாய்ப்பானது.
  5. இதுபோன்ற பயிற்சிப் பட்டறையை இதுகாறும் கண்டதில்லை.
  6. மனதில் நீங்கா இடம்பிடித்த சிறந்த பயிற்சி முறை. 
என்பதே மாணாக்கரின் குரலாக ஒலித்தது எங்களுக்கும் மன நிறைவைத் தந்தது.


ஆக்கம்
பாண்டூ,சிவகாசி
pandukavi16@gmail.com
9843610020





Friday, October 4, 2013

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் கவிதை நூல் வெளியீட்டு விழா

(‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ கவிதை நூல்அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத் தலைவர் நாவலாசிரியர் பொன்னீலன் வெளியிட, மாநில பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு பெற்றுக்கொண்டார்.) படத்தில் : இடமிருந்து வலம் : காமராசு, பாண்டூ, பொன்னீலன், கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி, பின்புறம் : டாக்டர் சாந்திலால், பாலசுந்தரம்)

சிவகாசி 12 மே 2013
            தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் மாவட்டக் கிளையின்  சார்பில் சமீபத்தில் மறைந்த ஞானக்குயில் கவிஞர் செ.ஞானன் ள் அவர்கள் நினைவு இலக்கிய விழா 12 மே 2013 ஞாயிறன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரோட்டரி ஸ்பார்க்ளர்ஸ் சொசைட்டி ஹாலில் நடைபெற்றது. 
           மாவட்டத் தலைவர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தலைமையில் தொல்பொருள் ஆய்வாளர் தோழர் பாலசந்திரன் மற்றும் தனுஷ்கோடி இராமசாமி அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் த.அறம் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் செ.ஞானன் அவர்களின் நினைவுகூறல் நிகழ்வு நடந்தது. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க தேசியத் தலைவர் நாவலாசிரியர் பொன்னீலன், மாநில பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு, திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தோழர் விச்சலன், வணிக வரிகள் துணை ஆணையர் (பணி நிறைவு) த.சிவசுப்பிரமணியன், சிறுகதை எழுத்தாளர்  முத்துபாரதி, கவிஞர் இலக்கிய ராஜா, பாரதி இலக்கியச் சங்கம் செயலாளர் கவிஞர் ம.திலகபாமா உள்ளிட்ட பலர் ஞானன் நினைவுகளை பகிர்ந்தனர். சேகர் மற்றும் நவீன் ஆகியோர் கவிதாஞ்சலி செய்தனர். ஞானனின் மகள் பாரதிச்செல்வி நிறைவாக பகிர்ந்துகொண்டார்.
           கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்கள் தொகுத்த, ஞானன் அவர்கள் எழுதிய ’ஓர் அந்திமலரின் சில மகரந்தங்கள்’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது மாவட்டத் துணைத் தலைவர் கோதையூர் மணியன் அவர்கள் தலைமை தாங்க சாத்தூர் கிளைத் தலைவர் பழனிக்குமார் முன்னிலையில் மதிப்புறு தலைவர் குறிஞ்சிச்செல்வர் கொ.மா.கோதண்டம் அவர்கள் நூலை வெளியிட, ஞானன் துணைவியார் உஷா அவர்கள் முதல் நூலை பெற்றுக் கொண்டார்.  அம்பை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் புலவர் தெ. சண்முகசுந்தரம், வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை செயலாளர் முனைவர் சு.நயினார் மற்றும் சிவகாசி கிளைத் தலைவர் எழுத்தாளர் ஸ்வரமஞ்சரி ஆகியோர் நூல் குறித்து உரையாற்றினர்.
           மதிய  நிகழ்வுகளுக்கு டாக்டர் ஆர்.எம்.ஆர். சாந்திலால் அவர்கள் தலைமையேற்றார். ஹையர்கிரிவாஸ் பள்ளியைச் சேர்ந்த திருமிகு ஆர்.எஸ்.பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். கவிஞர் பாண்டூ அவர்களின் ‘பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்’ என்ற கவிதை நூலும் முனைவர் பொ.நா.கமலா அவர்களின் ‘இறைச்சி பன்முகநோக்கு’  என்ற கட்டுரை நூலும்  வெளியிடப்பட்டன. சாத்தூர் கிளையைச் சேர்ந்த கதைசொல்லி இராம்மோகன் கந்தகப்பூக்கள் யுவபாரதி, நீலநிலா செண்பகராஜன், கோவில்பட்டி கம்பன் கழகத் தலைவர் செம்மைநதிராசா, பேராசிரியர்கள் அ.பரமசிவம், கருமுருகானந்தராஜன், கா.ராஜகணபதி மற்றும் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டச் செயலாளர் சு.வினோத் ஆகியோர் நூல்கள் குறித்து உரையாற்றினர், மாவட்டச் செயலாளர் கண்மணிராசா அனைவருக்கும் நன்றி கூறினார். இராசபாளையம் கிளைச் செயலாளர் பா.முருகேசன் நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கினார்.

Friday, September 27, 2013

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் விமர்சனம் - முனைவர் பா.பொன்னி.



மனித சமூகம் தன் முகம் பார்த்துக் கொள்ளும் கண்ணாடி இலக்கியம். மற்ற இலக்கிய வகைகளை விட கவிதை இலக்கியம், வாசகன், படைப்பாளன், சமூகம் மூன்றினையும் எளிதில் ஒருங்கினைக்கும் ஆற்றல் பெற்றது. மரபுகளையும், மரபுக் கவிதைகளையும் மறந்து வரும் இக்காலத்தில் மனதை நெகிழச் செய்கிறது இந்த பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம். இலக்கியம் படிப்பவர்கள் கூட எழுதத் தயங்கும் மரபுக் கவிதைகளை சொற்களில் வடித்துக் காட்டியிருக்கும் கவிஞர் பாண்டூவின் திறம் பாராட்டிற்க்குரியது. கவிதையும் இவரது காதலியாக கைகோர்ந்து வலம் வந்திருப்பதனை ரசிக்க முடிகிறது.

எழுத்துக்கள் சரித்திரங்களையே மாற்றிவிடும் தன்மை கொண்டவை ப்லரது வாழ்வில் புத்தகங்கள் முக்கிய அங்கம் வகித்திருப்பதனை சரித்திரங்கள் பறைசாற்றுகின்றன.
                
                 "வா பக்கம் வா
                 என்னை ஒவ்வொரு
 பக்கமாக புரட்டு
 முடிவில் உன்னை நான்
 புரட்டிப்போட்டிருப்பேன்"

என்ற கவிஞரின் வரிகள் புத்தகத்தின் செம்மையை சீர்தூக்கிச் சொல்கின்றன. வருணாசிரம முறை மக்களின் வாழ்க்கையினை ஒரு சட்டத்திற்குள் அடக்கி வைத்திருந்தது. நிலவில் குடியேற நாள் பார்க்கும் இந்நாட்களில் இம்முறை ஓரளவு வழக்கிழந்து விட்டது. ஆயினும் சிலர் இம்முறையினை ஆதரித்து வருகின்றனர். அதை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தோல்வியே பரிசாகக் கிடைக்கிறது.

"எல்லா வர்ணங்களையும் ஒன்றாய் கூட்டிப்
பிடிக்கத் துடிப்பவருக்கு
எப்போதும் கிடைக்கிறது
கழுதைப் பட்டம்."

        இந்த கவிதையில் நால் வகை வருணாசிரம் முறையினை சீட்டு விளையாட்டுடன் ஒப்பிட்டிருக்கும் கவிஞரின் நோக்கு புதுமை.

        நாங்கள் வித்தியாசமானவர்கள் எனும் கவிதை சுற்றுச் சூழலை அழித்து இன்பமாக வாழ விரும்பும் மனங்களின் முரண்பட்ட நிலையை கேலி செய்கிறது
                       
                        "மரங்களை மொட்டையாக்கி
                        மழைக்கு வேண்டுதல் வைப்போம் !
ஓசோனுக்குக் காது குத்தி
இந்திரனுக்கு விழா எடுப்போம் !
கழிவுகளை வைகையில் இட்டு
அழகரை அதில் இறக்குவோம் !
காடுகளைக் கட்டடம் ஆக்கி
ஜன்னலில் போன்சாய் வைப்போம் !"

        என்ற கவிதை வரிகள் உமையை படம் பிடித்துக் காட்டுகின்றன. விளை நிலங்களை கட்டிடங்களாக்கி விவசாயத்தை அழித்து வரும் நிலையினை,
                       
"விலை நிலமாகிப் போன
                        விளை நிலத்தை
ஏக்கப்பார்வைப் பார்த்தபடி
செக்யூரிட்டியாய் நிற்கும்
முன்னாள் விவசாயி"

என்ற கவிதை வரிகளிலும் கவிஞர் பதிவு செய்துள்ளார். பெண்ணியம், பெண் விடுதலை என்று எவ்வளவு தான் பேசினாலும் இன்றும் மணவாழ்வில் பெண்கள் தளைகளுக்குள் கட்டுப்படுத்தப் படுகின்றனர்.

"விறைப்பாய் நிற்கும்
நாருக்கு எப்போதுமே
தனி முறுக்கு !
நல்வாசனைத் தந்து வந்தாலும்
பூவின் கழுத்துக்குத்தான் சுருக்கு !"

        என்ற கவிதை வரிகளில் திருமணத்தை மாலையாக்கி கணவனை நாராகவும், மனைவியை பூவாகவும் உருவகப்படுத்தியிருக்கும் கவிஞரின் கற்பனை சிறப்பு.
        
         இன்றைய கலாச்சார முறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையினையும் கவிஞர் தம் கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

"பொங்கலுக்கு வாய்க்கரிசி போட்ட
பீட்சாவும் கோலாவும்
நம்மோட கையில் "

என்ற வரிகள் விழாக்களை கொண்டாடும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையைக் குறிப்பிடுகின்றன.
"அடுப்பங்கரையில் பூனை
வாசலில் நாய்
முதியோர் இல்லத்தில் தாத்தா"

        என்ற துளிப்பா கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை மாறி, முதியோர்களைப் பாதுகாக்கும் மனநிலையும் மாறி வந்துள்ளமையை வெளிக்காட்டுகின்றன.

        தமிழுக்கு மாலை சூட்டுபவர்கள் தமிழை தழைக்கச் செய்யப் பாடுபட்ட தமிழ்த் தாத்தாவை மறந்து விட்டனர். ஆனால் அவருக்கும் நம் கவிஞர் கவிமாலை சூட்டியுள்ளார்.

"ஓலையிலே ஒண்டிக்கிட்டுக் கிடந்தது தமிழன்னை - அதை
அச்சிலேற்றி பார்க்கவச்சான் கண்குளிர நம்மை
தமிழ்த்தாத்தா என்றிவனைத் தமிழுலகம் மெச்சும் – அட
இவன் தானே இவன் தானே தமிழ்த்தேரின் அச்சும்"

        என்ற வரிகளில் தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்களின் பெருமையினைப் பறைசாற்றுகிறார்.

        இது மட்டுமல்லாது சமூகத்தின் மீதான கவிஞரின் அக்கரையினையும், நம்பிக்கையின்மையையும், கோபத்தையும் புலப்படுத்துவதாக இக்கவிதைகள் அமைந்துள்ளன.
       
           பள்ளி நிர்வாகத்தின் சீர்கேட்டால் நெருப்பிற்கு இரையான குழந்தைகளுக்காக மனம் வருந்தி அவ்வருத்தத்திற்கு வடிவம் தந்துள்ளார்

"சத்துணவுக் கூடத்திலே இட்ட தீ
கூரை மீது ஏறி
வெளிச்சம் போட்டுக் காட்டியது
எங்கள் வாத்தியார்களின் வக்கணையை
கல்வி அதிகாரிகளின் மெத்தனத்தை"

என்ற வரிகள் சமூகத்தின் மீதான கோபத்தின் வெளிப்பாடாக அமைகின்றன.

                        "படித்ததும்
வேலை
                        டாஸ்மாக்கில்"

என்ற துளிப்பா படித்த இளைஞர்களின் அவலத்தைச் சுட்டுகிறது.

"தண்ணீர் பஞ்சம்
தாராளமாய் கிடைக்கிறது
மினரல் வாட்டர்"

        என்ற துளிப்பா மனிதனின் இன்றியமையாத குடிநீரும் இன்று விலை போய் விட்டதை விளக்குகிறது. குடிநீர் மட்டுமல்ல சுவாசிக்கும் காற்றும் கூட சந்தைக்கு வரலாம் என்று அபாயமணி எழுப்புவதனை

"நாம் மாசு ஆக ஆகக்
காசாகிப் போவேன் !
என்னையும் பையிலடைத்து
முதுகில் சுமந்து திரியும்
நாள் தொலைவில் இல்லை !"

        என்ற வரிகள் உரக்கச் சொல்கின்றன, இவரது கவிதைகளில் உத்திகளைச் சிறப்பாகக் கையாண்டுள்ள தன்மையையும் காண முடிகிறது.

"பித்துப் பிடித்தவன் இன்று அமாவாசை நாளென்று
பிள்ளைக்கறிக் கேட்டானோ ? உனை ஏவி விட்டானோ ?
அன்று சீதையைத் தொட மறுத்தாய்
இன்று சிறாரை சுட்டு எரித்தாய்"

        என்ற வரிகளில் தொன்மத்தை கையாண்டுள்ள முறை சிறப்பானது.
        இலக்கியம் சமூகத்திற்கானது, சமூக மாற்றங்களுக்கு காரணமானது என்ற அடிப்படையில் பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம் எனும் இக்கவிதைத் தொகுப்பு கவிதை இலக்கிய உலகில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது. ஐயமில்லை.

                                                                        முனைவர் பா.பொன்னி,
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்,
எஸ்.எஃப்.ஆர். கால்லூரி,
சிவகாசி.
9790398321.