Wednesday, June 22, 2016

டுவிட்டூ

டுவிட்டூ
-------------
வான் மழையும் பொழிந்திட ஏன் துடிக்குது?
ஓ! அது உன்னில் நனைந்திட தவிக்குது!!
           - டுவிட்டூ பாண்டூ.

Friday, June 10, 2016

உலக சுற்றுச்சூழல் தினம் - தண்ணீர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை  (4.6.16) முன்னிட்டு பொள்ளாச்சி த.மு.எ.க.ச.வின் இலக்கிய சந்திப்ப்பிறகாக ,அளிக்கப் பட்ட தோழர்.டுவிட்டூ பாண்டூ அவர்களின் கவிதை..

தண்ணீர்..
===========

மனிதா! நான் நீராவி பேசுகிறேன்...
இல்லை... இல்லை... நீரின் ஆவி பேசுகிறேன்!
செத்த பிறகு தானே ஆவி... ஆம்!
 நீ தான் என்னை சாகடித்துக் கொண்டே இருக்கிறாயே!

வெப்பமயமாதலால்... நான் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறேன்!

மனிதா! பூமிப் பானைக்கு ஓஷோன் ஓட்டை வழி தீமூட்டி...
உயிருக்கு உலை வைக்கிறாய் நீ!

இயற்கைத் தாயை வீணாய்ப் பொங்க வைக்கிறாய் நீ!

கொதிக்கும் உலையை நீர் தெளித்து அணைக்க
 நீள்வதே இல்லை உன் கரண்சி கரங்கள்!

சிறுதுளி பெரு வெள்ளம்....
பலமுறைப் படித்திருக்கிறாய்!

ஓ! பெரு வெள்ளம் எனக் கூச்சலிடும் நீ...
சிறுதுளிகளின் மேல் அக்கறை காட்டியதுண்டா?

அணையைத் தவறாகத் திறந்துவிட்டதாய்
ஆர்ப்பரிக்கும் நீ...
உன் வீட்டு குழாயைச் சரியாக மூடியதுண்டா?

மரங்களை மொட்டையாக்கி விட்டு
மழைக்கு வேண்டுதல் வைப்பவன்தானே நீ!

சுனாமியாகி எச்சரித்தேன்...
பெருவெள்ளமாகி எச்சரித்தேன்... ஏன்?
வறட்சியாகி கூட எச்சரித்தேன்...
அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்காய்!

வா! சொட்டுகிற எனக்குளிருந்து
கொட்டுகிற குமுறலைக் கேள்! வா!

பூதங்களின் உலகிற்கு உன்னை வரவேற்கிறேன்!
ஹா...ஹா... பயப்படாதே!

பஞ்ச பூதங்களின் உலகுதானே இது! மனிதா! நீ
 கூட பஞ்ச பூதங்களின் கலவைதான்! '

நீர்' என்னை விடுத்து கலவை என்பது சாத்தியமில்லை!
என்னை விடுத்து கலவி கூட சாத்தியமில்லை!
என்ன வியக்கிறாய்!?
உலகில் முதல் உயிர் என்னுள்தான்...
என்னால்தானே ஜனித்தது!

உறங்குவது போல் சாக்காடு என்றான் வள்ளுவன்...
அப்படி மரித்தது போல் தூங்கும் உன்னைத்
தினம் உயிர்த்தெழச் செய்வது
என் துளி குளியலால் அல்லவா!

உயிரை... உயிர்ப்பை... உற்பத்திச் செய்யும்
பிரம்மா நான்!
படைப்புலகின் நாயகன் நான்!

கடலிலிருந்து மேகம் கடைந்தெடுத்த அமுதம் நான்!
உன் தாகம் தீர்க்க கல்லும் முள்ளும் கடந்து
ஓடிவரும் என் கால்களை நீ ஒடிப்பதா?

உனக்குச் சாகா வரம் கொடுக்க விண்ணிலிருந்து
மண்ணிறங்கிய தேவதை நான்!

நீயோ என் சிறகொடித்துச் சிரிக்கிறாய்!
உன்னைக் காக்கும் நீல வண்ணன் நான்!

மழை, அருவி, ஓடை, ஆறு, ஏரி, குளம், குட்டை,
தெப்பம், கேணி, கிணறு, கண்மாய், கடல், ஊற்று எனத்
தசவதாரங்களுக்கும் மேலாய் அவதாரம் எடுக்கிறேன்
நான் உன்னைக் காப்பதற்கு...

 ஆனால் நீயோ... வரம் கொடுத்தவன்
தலையிலேயே கைவக்கும் கைதேர்ந்தவன்!
என் தலையில் மனிதகுலத்தின் சாபக் கரங்கள்!
ஆலைக் கழிவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்!

நெகிழிக் குப்பைகளால் மூச்சுத்திணறிச் சாகிறேன்!
சுத்தம் செய்யும் என்னை
அசுத்தம் செய்யும் ப(க்)தர்கள் மனிதர்கள்!

உன் மதச் சடங்குகளால் கெடுகிறது என் புனிதம்!
உன் பாவங்களால் மூட் கிரீடம் சூட்டி
சிலுவையில் அறையப்படுகிறேன் நான்!
உனது பிணம் என்னை நாறடிக்கிறது!
நான் மாசு ஆக ஆக காசாகிப் போனேன்!

 டாப் ஆப் மூலம் குடிநீர் ரீ-ஃபில் செய்யும் காலம் தொலைவில் இல்லை!
சொட்டு நீர் பாசனம் போல்
நாளை உன் தாகத்திற்குக் கூட சொட்டு நீர்
துட்டுக்கு வழங்கப்படும்!

எண்ணெய்க்காக போர் நடந்தது
 இனி... எனக்காக போர் வெடிக்கும்!
நீரில் நிலா பார்த்த காலம் அன்று!
நிலாவில் நீரைத் தேடும் காலம் இன்று! மனிதா...
இனியும் தாமதிக்காதே!

இன்னும் தாமதித்தால்...
அழிக்கும் ருத்ரனாவேன்!
சுனாமி... எனது விஸ்வரூபம்!
பெரு வெள்ளம்... எனது ருத்ர தாண்டவம்!
 உலகத்தின் முடிவு நீரின் கையிலா?
நெருப்பின் கையிலா?
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறாய் நீ!

மனிதா! உலகின் முடிவு உன் கையில் தான்! நீ!
இணைய முடியாமல் இறந்து போன நதிகளுக்காய்
என்றேனும் அழுததுண்டா?

கல்லும் கரம்பையும் அள்ளிக் கொண்டோடும்
லாரிகளைக் கண்டு கொதித்ததுண்டா?

பஞ்ச பூதங்களில் விண்ணுண்டு!
மண்ணுண்டு! நெருப்புண்டு! காற்றுண்டு!

ஆனால், நான் இல்லாது போனால்
இந்த பூமி... உயிரற்ற கோள்களில்
பத்தோடு ஒன்று! பதினொன்று!
என்றேனும் உணர்ந்ததுண்டா?

உன்னில் முக்கால்வாசி நான்!
உள்நாக்கின் தாகம் தீர்ப்பேன்!
உடல் சூட்டைத் தனிப்பேன்!
ஜீரண சக்தி கொடுப்பேன்!
நச்சுக் கழிவை துப்புரவு செய்வேன்!
உன்னை மாரடைப்பில் இருந்து காப்பேன்!

நோயைக் குணப்படுத்தும் என்னை...
நோயின் பிறப்பிடமாய்
கொசுவின் இருப்பிடமாய் மாற்றியது நீயா? நானா?
நான் சொல்வதை ஓடும் தண்ணீரில் எழுதி வை!
என்ன பார்க்கிறாய்!

 எனக்கு நினைவாற்றல் உள்ளதை
உனது விஞ்ஞானம்... இப்போதுதான் நிரூபித்திருக்கிறது!
என்னில் படிமமாய் படிந்திருக்கிறது...
இப்பிரபஞ்சத்தின் சுவடுகள்!

ஆம்! நான் சொல்வதை ஓடும் தண்ணீரில் எழுதி வை!
அதை உன் சந்ததிக்கு உயிலெழுது!
நீர் வளம் பெருக்கு! பயன்பாட்டைச் சுருக்கு!
மறைநீர் அறி! முன்னோர்களின் நீர் மேலாண்மை
 கற்றுத் தெளி!

 நீ இன்றியும் உலகம் அமையும் உணர்!
உன் நாட்டுக் குடிநீரை... உன்னிடமே விற்று...
 லாபம் பார்க்கும்,
பன்னாட்டு நிறுவனத்தைத் தகர்!

இறுதியாய் ஒன்று...
கண்ணீர் வடிப்பதானால் கூட தண்ணீர்
இருந்தால்தான் முடியும்!!

--------- - 'டுவிட்டூ' பாண்டூ, சிவகாசி. 6 ஜவுளிக்கடை வீதி, சிவகாசி - 626123. செல்: 9843610020.

Wednesday, June 8, 2016

புத்தகக்கண்காட்சி - 2016

#புத்தகக்கண்காட்சி - 2016

 சென்னை, 39 ஆவது புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய நூல்கள்...

1. கவிஞர் மு.முருகேஷ்சின் 'பறக்கும் பப்பி பூவும் அட்டைக் கத்தி ராஜாவும் ' - அகநி வெளியீடு - 9842637637.

2. சமூக ஆர்வலர் கா.கலைமணியின் 'உண்மையின் விளிம்பில் - ஆன்மீகத்தின் பேரானந்தமே கம்யூனிசம்' - நியூஸ் மேன் பிரிண்டர்ஸ்  - 9750216624.

3. எழுத்தாளர் அ.கா.ஈஸ்வரனின் 'லெனின் வாழ்வும் படைப்பும் ' - பொன்னுலகம் பதிப்பகம் - 9486641586.

4. அ.மார்க்ஸ்ஸின் 'புத்தம் சரணம்' - தமிழ்நாடு பெளத்த சங்கம் - 9094869175.

5. சத்குரு ஜக்கி வாசுதேவின் 'பென் - இறைமையின் மறுபக்கம்' - ஈஷா அறக்கட்டளை - 0422- 2515345

6. சத்குரு ஜக்கி வாசுதேவின், சுபாவின் எழுத்தாக்கத்தில் 'மூன்றாவது கோணம்' - ஆனந்த விகடன் வெளியீடு - 044-42634283.

கவியாட்படை

#புத்தக்கண்காட்சி
#சென்னை 39 வது புத்தகக் கண்காட்சி
  5.6.2016 சனி, சென்னை புத்தகக் கண்காட்சிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். கீதம் பதிப்பகத்தாரின் 6 நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
   அதில்  'கவியாட்படை' எனும் 36 கவிஞர்கள் பங்கு கொண்ட கூட்டுத் தொகுப்பும் வெளிடப்பட்டது. 36 கவிஞர்களுள் நானும் ஒருவன். எனது "பாதை வழி மரணம் போகிறவர்கள்"  என்கிற கவிதை அதில் இடம்பெற்றது.
  நூலுக்கு தமிழ்த் திரைப்பாக்கூட நிறுவனர் பாடலாசிரியர் பிரியன் வாழ்த்துரை வழங்கியிருந்தார். பாடலாசிரியர்கள் பிரியன் மற்றும் அண்ணாமலை அவர்கள் வெளியிட நூல்களைப் பெற்றுக் கொண்டது கூடுதல் சிறப்பு. நிகழ்வை ஒருங்கிணைத்த சிவராசு தோழருக்கு நன்றி.

மேலும்.. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தோழர்கள் மணிமுடி அய்யா மற்றும் ஜான்சன் அய்யா நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுக்கும் என் நன்றிகள்.









Monday, June 6, 2016

இரவு பகல்

நீ தூங்கச் சென்றாய்...
  வானம் இருண்டது!

கண் விழித்தாய்...
  வண்ணம் கொண்டது!!

             - டுவிட்டூ பாண்டூ.

காதல் டுவிட்டூ

#டுவிட்டூ

இருவிழியில் மை தடவிப் பார்க்கிறாள்...
சிக்குவானா இதயத் திருடன்!?
           
                     - டுவிட்டூ பாண்டூ.