Friday, February 21, 2014

நான் மனுஷி!

மகளிர்தினச் சிறப்புக் கவிதை


எனது பொறுமை
நசுங்கிக் கொண்டிருக்கிறது
உன் உறவுப் பாறையின்
அடியில்…
மதுவாடை சகிக்க
என் மூக்கு
கல்லால் செதுக்கப்படவில்லை…
மற்றவனின்
புகழ்புராணத்தைப் பொறுக்க
என் காதுகள்
மரத்தாலானவையல்ல…
நானும்
எலும்புகளால்.
தசையால்,
ரத்தத்தால்,
உணர்வுகளால்,
கனவுகளால்,
ஆக்கப்பட்டவளென்பதை
உணர்ந்திருக்கிறாயா நீ?
ஒன்றுக்கு
மூன்று பேரின் உடலை
நீ பகிர்ந்து கொண்டாலும்
ஒழுக்கத்தின்
உச்சியில் நிற்கிறாய்!
நான் உன் காலடியில்
தவம் புரிந்தாலும்
சோரம் போகிறவளாக
சோதிக்கப்படுகிறேன்!
இது
முரண்பாட்டுக் கூச்சல்
மூடர்களின் கூடாரம்
வீசியெறிகிறேன்
இதோ நீ தந்த
மனைவிப்பட்டம்
தாலி, மெட்டி
அடையாளங்கள்
எனக்கெதற்கு….
பயம் உணர்ந்து
உடலை சுருக்குவதும்
உறுப்புகளை
இழுத்துக்கொள்வதும்
ஆமைக்கு உரியது
நான் மனுஷி!
********************
நன்றி : 
https://rammalar.wordpress.com/2008/11/27/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF/

No comments:

Post a Comment