Thursday, January 14, 2016

பொங்கலோ பொங்கல்!

பொங்கலோ பொங்கல்!
=====================

குறிஞ்சியோ...
     குண்டாலே குடைந்தெடுத்து
     அழிக்க லாச்சி!

முல்லையோ...
     இப்போது இல்லை
     என்றே ஆயாச்சி!

மருதமோ...
     மனைகளாய் மாறி
     மாண்டே போயாச்சி!

பாலையோ...
     பூமியைப் பானையாக்கி
     அனல்மூட்டிப் பரந்து விரிஞ்சாச்சி!

நெய்தலோ...
     பொங்கலோ பொங்கலெனப்
     பொங்கியே வழிஞ்சாச்சி!

ஐந்திணைகளை ஏப்பம்விட்ட
அரக்கன் யாரு தெரியல!

பொங்கலுக்கு வாய்க்கரிசி போட்ட
பீட்சாவும் கோலாவும்
நம்மோட கையில!

உலையிட்ட அரிசியாக
உண்மை மனம் கொதிக்கலையா?

உலகமய நெருப்பின்னும்
உன்னை வந்து வாட்டலையா?

ஜல்லிக்கட்டுக்கு...
மல்லுக்கட்டும் தமிழா!
உண்மையை உணர்ந்த பின்னும்
இன்னும் நீ பொங்கலையா?
         
                               - பாண்டூ, சிவகாசி.
(எனது 'பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்' நூலிலிருந்து...)


No comments:

Post a Comment